|
வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனில்
கூறுகிறான்:
'எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும்,
அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய
செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்:
அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு
மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை: (இவ்வுலகில்)
இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன: அவர்கள் செய்து
கொண்டிருப்பவையும் வீணானவையே!' (அருள்மறை குர்ஆன்
அத்தியாயம் - 11 ஸூரத்துல் ஹூது - 15 மற்றும் 16ஆம்
வசனங்கள்).
'ஹஜ்' என்கிற கடைமையை இஸ்லாத்தின் இறுதி கடமையாக அல்லாஹ்
முஸ்லிம்கள் மீது விதித்திருக்கிறான். முஸ்லிமான எவரிடம்
பொருளாதார வசதியும், உடல் வலிமையும் இருக்கின்றதோ, அவர் ஹஜ்
செய்வது கட்டாயக் கடமையாகும். மேலும் அல்லாஹ்வின் தூதர்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'யார்
அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து அசிங்கமான வார்த்தைகள் பேசாமல்,
பாவமான காரியங்களில் ஈடுபடாமல் இருக்கிறாரோ, அவர் ஹஜ்ஜை
முடித்துவிட்டுத் திரும்புகிற போது அன்று பிறந்த பாலகன்
போல் திரும்புகிறார்.' (ஆதார நூல்: புஹாரி).
இவ்வாறு அல்லாஹ் விதித்த கடமையான ஹஜ்ஜை தூய்மையான
எண்ணத்துடனும், செயல்களுடனும் செய்துவிட்டு வந்த நம்
இஸ்லாமிய சகோதரர்கள் 'ஹாஜி' என்றும், சகோதரிகள் தங்கள்
பெயர்களுக்கு முன்னால் 'ஹாஜிமா' என்றும் அடைமொழி
இட்டுக்கொள்வது காலங்காலமாக நம் சமுதாய மக்களின் வழக்கமாக
இருந்து வருகிறது.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
மதினாவிலிருந்து மக்கா வந்து 'ஹஜ்' செய்துவிட்டு மீண்டும்
மதினா திரும்பினார்கள். அவர்களுடன் அவர்களின் அன்பு மனைவி
ஆயிஷா (ரலி) அவர்களும் 'ஹஜ்' என்னும் கடமையை முடித்துவிட்டு
மதினா திரும்பினார்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்களோ அல்லது
அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களோ தங்கள்
பெயர்களுக்கு முன்னால் 'ஹாஜி' என்றோ அல்லது 'ஹாஜிமா' என்றோ
அடைமொழி இட்டுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் 'ஹஜ்' செய்தபோது அவர்களுடன் அவர்களின்
அன்புத்தோழர்கள் பலர் 'ஹஜ்' என்கிற கடமையை செய்தார்கள்.
அவர்களில் எவரையும் நாம் 'ஹாஜி' என்று அழைப்பதில்லை.
இருப்பினும் 'ஹஜ்' என்னும் கடமையை முடித்துவிட்ட நம்
சமுதாய மக்கள் தஙகள் பெயருக்கு முன்னால் 'ஹாஜி' அல்லது 'ஹாஜிமா'
என்று அடைமொழி இட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் வேரூன்றி
போய் இருப்பதை காண்கிறோம்.
இவ்வாறு அடைமொழி இட்டுக்கொள்வது எப்படியிருக்கிறது என்றால்
- இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் சிலர் மிசா என்ற
சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
அவர்கள் சிறையிலிருந்து வெளியானவுடன் தங்கள் பெயருக்கு
முன்னால் 'மிசா' என்கிற அடைமொழியைச் சேர்த்துக்
கொள்வதைப்போலவும், தடா என்ற சட்டத்தின் அடிப்படையில் கைது
செய்யப்பட்டவர்கள் 'தடா' என்கிற அடைமொழியைத் தங்கள்
பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதைப்போலவும்
இருக்கிறது.
அல்லாஹ் விதித்த ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜினை
நிறைவேற்றி வந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் 'ஹாஜி'
என்ற அடைமொழியைச் சேர்த்து கொள்வதில் பலவிதத்தில் உள்ளது.
ஒரு முறைக்கு மேல் இன்னொரு முறை 'ஹஜ்' கடமையை நிறைவேற்றி
வந்தவர்களில் சிலர் 'அல்-ஹாஜ்' என்ற அடைமொழியைத் தங்கள்
பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதை நாம் நம் அன்றாட
வாழ்வில் கண்டு வருகிறோம். அதுமட்டுமில்லாமல் தாங்கள்
வைத்திருக்கும் கடைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும்
ஹாஜி ஸ்டோர் என்றும், ஹாஜி அன் ஸன்ஸ் என்றும், ஹாஜி
மளிகைக்கடை என்றும் பெயர் வைத்துக் கொண்டு விளம்பரம்
தேடிக்கொள்ளும் நிலையையும் பார்க்கிறோம். தவிர ஹஜ் என்னும்
இஸ்லாத்தின் கடமையை முடித்தவிட்டு வந்தவர்களை, அறிந்தவர்கள்
சாதாரணமாக அழைக்கும்போது கூட 'ஹாஜி' என்று அழைப்பதையும்,
அவ்வாறு அழைக்கப்படுவதை சம்பந்தப்பட்டவர் அவ்வாறு அழைக்கக்
கூடாது என்று மறுக்காமல், அவ்வாறு அழைப்பதே தமக்குப் பெருமை
சேர்க்கும் என்ற நோக்கத்தில் இருந்து வருவதையும் நாம்
அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம். மேற்படி செயல்கள்
இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, இஸ்லாத்தில் புதிதாக
புகுத்தப்பட்ட ஒரு நூதன செயலாகும்.
'நமது உத்திரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது
நிராகரிக்கப்படும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
ஆதார நூல்: முஸ்லிம்).
அல்லாஹ் முஸ்லிம்கள் மீது விதித்த கடமைகளான - ஈமான் கொள்வது,
இறைவனைத் தொழுவது, ஜக்காத் கொடுப்பது, நோன்பு நோற்பது
போன்ற நான்கு கடமைகளைப் போன்று ஐந்தாவதாக அல்லாஹ் விதித்த
கடமைதான் 'ஹஜ்' என்கிற கடமையுமாகும். அல்லாஹ் விதித்த மற்ற
கடமையான ஈமான் கொண்டவர் எவரும் தனது பெயருக்கு முன்னால் 'ஈமானி'
(ஈமான் கொண்டவர்) என்கிற அடைமொழியை இட்டுக் கொள்வதில்லை.
அதுபோல இறைவனை ஐவேளையும் தவறாமல் தொழுதுவரும் எவரும் தம்
பெயருக்கு முன்னால் 'முஸல்லி' (தொழுகையாளி) என்கிற
அடைமொழியை இட்டுக் கொள்வதில்லை. தவிர நோன்பு நோற்கும்
எவரும், அல்லது ஜக்காத் கொடுக்கும் எவரும் தங்கள் பெயருக்கு
முன்னால் 'ஸொம்வி' (நோன்பாளி) என்றோ, 'ஜக்காத்தி' (ஜக்காத்
வங்குபவர்) என்கிற அடைமொழிகளையோ இட்டுக் கொள்வதில்லை.
ஆனால் இந்த இறுதிக்கடமையான ஹஜ்ஜை முடித்து விட்டவர்கள்
மாத்திரம் (குறிப்பாக இந்தியா, இலங்கை, மலேசியா,
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் ஹஜ் கடமையை
முடித்துவிட்ட முஸ்லிம்கள்) தங்கள் பெயருக்கு முன்னால் ஹாஜி
என்கிற அடைமொழியைச் சேர்த்து கொள்கிறார்கள். இவ்வாறு 'ஹாஜி'
என்று தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழி இட்டுக் கொள்ளும்
வழக்கம் அரபு நாடுகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களிடையே
இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வாறு
விளம்பரத்திற்காகவும், இந்த உலகில் தங்கள் புகழ்
ஒங்கவேண்டும் என்ற பெருமைக்காகவும் அல்லாஹ் விதித்த கடமைகளை
செய்யக் கூடியவர்களைப் பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில்
கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகின்றான்:
'எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும்,
அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய
செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்:
அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு
மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை: (இவ்வுலகில்)
இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன: அவர்கள் செய்து
கொண்டிருப்பவையும் வீணானவையே!' (அருள்மறை குர்ஆன்
அத்தியாயம் - 11 ஸூரத்துல் ஹூது - 15 மற்றும் 16ஆம்
வசனங்கள்).
அவர்கள் செய்யும் இது போன்ற நூதனமான காரியங்களுக்கான
பலன்களை இவ்வுலகத்திலேயே நிறiவேற்றுவதாக வாக்களிக்கும்
இறைவன், மறுமையில் அவர்களுக்கான பலன் நரக நெருப்பைத் தவிர
வேறெதுவும் இல்லை என்று எச்சரிக்கையும் விடுக்கிறான்.
மேலும் இவ்வுலகில் அவர்கள் செய்த செயல்கள் யாவும்
அழிந்துவிடும் என்றும், அவர்கள் செய்து கொண்டிருப்பவை
யாவும் வீணான செயல்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.
இவ்வாறு அல்லாஹ் விதித்த கடமைகளை நிறைவேற்றும்போது -
அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறோம் என்கிற எண்ணம் இல்லாமல்
இவ்வுலக வாழ்க்கையில் பெயரும், பெருமையும் பெற வேண்டும்
என்ற எண்ணத்தில் செய்யக் கூடிய செயல்கள் யாவும்
நிராகரிக்கப்படும் என்பதை அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்)
அவர்கள் அறிவித்த கீழ்க்காணும் செய்தியிலிருந்து அறிந்து
கொள்ளலாம்:
'நமது உத்திவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது
நிராகரிக்கப்படும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல்
நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
ஆதார நூல்: முஸ்லிம்).
மேலே குறிப்பிட்பட்ட அருள்மறை குர்ஆன் வசனத்தை கருத்தில்
கொண்டு, அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின்
வழிமுறைப்படி ஹஜ் என்னும் கடமையை முடித்து விட்ட இஸ்லாமிய
சகோதர, சகோதரரிகள் தங்களுடைய பெயருக்கு முன்னால் 'ஹாஜி'
என்றும், 'ஹாஜிமா' என்றும் அடைமொழிகள் இடுவதை விட்டும்
தவிர்ந்து கொள்வார்களாக! மனிதனை நரகிற்கு இட்டுச் செல்லும்
இது போன்ற நூதனம்(பித்அத்) ஆன காரியங்களிலிருந்து வல்ல
அல்லாஹ் நம்மைப் பாதுகாத்தருள்வானாக! |