|
1) அரஃபா தினத்தின் சூரியன் மறைந்ததும்
அரஃபாவிலிருந்து மக்களை நெருக்கியடிக்காமல் அமைதியாக
முஸ்தலிஃபாவிற்கு வர வேண்டும். இது பற்றி ஜாபிர் (ரழி)
அவர்களின் அறிவிப்பில் வந்துள்ளதாவது: சூரியன் மறைந்து அதன்
மஞ்சள் நிறம் சற்று மறையும் வரை தங்கியிருந்த நபி (ஸல்)
அவர்கள், பிறகு உஸாமாவைத் தம்முடன் கஸ்வா என்னும்
ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அது
தனது தலையை முழுமையாகப் பின்னால் திருப்புமளவுக்கு
இறுக்கிப் பிடித்துக்கொண்டு, மக்களே! அமைதி! அமைதி! என்று
தமது வலது கையால் சைகை செய்து கூறிக்கொண்டிருந்தார்கள் (முஸ்லிம்).
2) அங்கிருந்து முஸ்தலிஃபாவை நோக்கிப் புறப்படும்போது
திக்ரு, துஆ, தல்பியா, தக்பீர், இஸ்திக்ஃபார் ஆகியவற்றை
அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள்
அரஃபாத்திலிருந்து புறப்படும்போது மஷ்அருல் ஹராமில்
அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்!' (2:198).
முஸ்தலிஃபாவில் இரவு தங்குதல்:
3) முஸ்தலிஃபாவில் ஏதேனுமொரு இடத்தில் தங்க வேண்டும்.
மஷ்அருல் ஹராமிலோ அதற்கு அருகிலோ தங்க வேண்டுமென்றோ அதில்
ஏற வேண்டுமென்றோ அவசியமில்லை. ஏனெனில், 'நான் இங்கு (மஷ்அருல்
ஹராமில்) தங்கியுள்ளேன். ஆனால் முஸ்தலிஃபாவில் எங்கு
வேண்டுமானாலும் தங்கலாம்' என்பது நபியின் கூற்றாகும் (முஸ்லிம்).
முஸ்தலிஃபாவை அடைந்ததும் மஃரிபையும் இஷாவையும் 3, 2
ரக்அத்கள் என்ற எண்ணிக்கையில் கஸ்ராகவும் ஒரு பாங்கு இரு
இகாமத் என்ற கணக்கில் ஜம்ஆகவும் தொழ வேண்டும்.
இரண்டிற்குமிடையே எந்த நஃபிலும் இல்லை. மேலும் இஷா தொழுகையை
அதற்கான கடைசி நேரமாகிய இரவின் பாதிக்கு மேல்
பிற்படுத்தக்கூடாது. ஏனெனில் 'இஷாவுடைய நேரம் இரவின் பாதி
வரையாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (முஸ்லிம்),
எனவே அங்கு வந்து சேருவதற்கு முன்பு இஷாவுடைய நேரம் கடந்து
விடும் என்ற அச்சம் ஏற்பட்டால் நேரத்தை அனுசரித்து தொழுகையை
அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும், அது அரஃபாவிலேயே
தொழ வேண்டியது வந்தாலும் சரியே!
4) இந்த இரவில் முஸ்தலிஃபாவில் தங்கிவிட்டு பிறகு அங்கேயே
ஃபஜ்ரையும் தொழ வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ஃபஜ்ர்
உதயமாகும் வரை அங்கேயே படுத்திருந்துவிட்டு நன்றாக வெண்மை
வெளிப்பட்டதும் ஒரு பாங்கு ஓர் இகாமத்துடன் ஃபஜ்ரைத்
தொழுதார்கள் என ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள் (முஸ்லிம்).
பிறகு முடிந்தால் மஷ்அருல் ஹராமில் அல்லது முஸ்தலிஃபாவின்
ஓரிடத்தில் நின்று கிப்லாவை முன்னோக்கிக் கொண்டு துஆ,
திக்ர், தக்பீர், தஹ்லீல் ஆகியவற்றை ஆகாயம் நன்றாக
வெளுக்கும் வரை அதிகப்படுத்த வேண்டும்.
5) ஆகாயம் நன்றாக வெளுத்ததும் சூரியன் உதயமாகும் முன்பு
அங்கிருந்து மினாவை நோக்கிப் புறப்பட வேண்டும்.
பலவீனமானவர்களும் பெண்களும் இரவின் கடைசி நேரத்திலேயே
மினாவிலிருந்து கிளம்பலாம். நபி (ஸல்) அவர்கள், ஸஹர்
நேரத்தில் தமது குடும்பத்தினரை முஸ்தலிஃபாவிலிருந்து
அனுப்பி வைத்தார்கள். (புகாரீ, முஸ்லிம்) மேலும் அஸ்மா
பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்களும் சந்திரன் மறைந்த பின்பு
முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டுப் போயிருக்கிறார்கள்.
பெரும்பாலும் சந்திரன் இரவின் மூன்றிலொரு பகுதி சென்ற
பின்பு மறையும்.
குறிப்புகள்:
1- உம்ராவில் எறிவதற்கான கற்களை முஸ்தலிஃபாவிலேயே பொறுக்க
வேண்டும் எனச் சிலர் எண்ணுகின்றனர். இது தவறான கருத்தாகும்,
நபி (ஸல்) அவர்கள் செய்யாததுமாகும். எனவே எங்கிருந்து
வேண்டுமானாலும் கற்களைப் பொறுக்கலாம். அதுபோல கற்களைக்
கழுவ வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் அவ்வாறு செய்ய
வேண்டுமென்று ஹதீஸ்களில் இல்லை. ஏற்கனவே எறியப்பட்ட
கற்களைக் கொண்டும் எறியக்கூடாது. சுண்டி விளையாடும்
அளவுக்குள்ளதாகவும் கொண்டைக் கடலையை விட சற்று பெரிதாகவும்
கற்கள் இருக்க வேண்டும்.
2- பெரும்பாலானவர்கள் இந்த இரவில் ஃபஜ்ர் தொழுகைக்கான நேரம்
வரும்முன் ஃபஜ்ர் தொழுகின்றனர். அது தவறாகும். அதற்குரிய
நேரம் வரும் முன் தொழுதால் அந்தத் தொழுகை நிறைவேறாது. |