|
நம்மோடு
குர்ஆனுக்கு உள்ள நெருக்கம் என்ன? |
குர்ஆனை உலகப் பொதுமறை
என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும்,
அதன் உள்ளடக்கத்தையும் அது உலகிற்கு வைக்கும்
அழைப்பையும் நம்மில் எத்துனைப் பேர் கூர்ந்து
- ஆழ்ந்து கவனிக்கிறோம்? முஸ்லிம்கள் பெருமைப்
பேசிக் கொள்வதற்காகவோ வெறும் புனிதப்
பொருளாகக் கருதிப் பாதுகாத்து வைப்பதற்காகவோ
குர்ஆன் இறக்கி வைக்கப்படவில்லை.
அதன் ஒளியும் - ஒலியும் உலகத்தாரின்
கண்களுக்கும், செவிகளுக்கும் சென்றாக
வேண்டும். அந்தப் பணியை செய்ய முஸ்லி்ம்கள்
தயாராகவில்லை என்றால் அவர்கள் குர்ஆனைப் பற்றி
பெருமைப் பேசுவது வெறும் வெத்துப் பேச்சாகவே
முடியும்.
குர்ஆனை பொருளரிந்து படிப்பதும், அதன்
கருத்துக்களை, வாதங்களை ஆழ்ந்து சிந்திப்பதும்
கட்டாயம்.
அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது.
திருமறையை சூரத்துல்
ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை
முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து
கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு
கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை
விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட
சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது,
இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை
ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின்
மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்)
அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது
என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின்
பொருளும் இதுதான்.
எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும்
அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக
அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன்
இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.
இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட
நபித்தோழர்களும் நபித்தோழியர்களும்
அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை
அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம்
இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே
கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு
வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது
என்று கூறுவது தவறான கூற்றாகும்.
திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை
நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை
அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி
பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள
செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு
ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல்
மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை
அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும்
என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன்
மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது
தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு
மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32,
47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ
فَهَلْ مِن مُّدَّكِرٍ
நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக்
கொள்ளும் பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து
நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன்
54:32)
َفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى
قُلُوبٍ أَقْفَالُهَاَفَلَا يَتَدَبَّرُونَ
الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க
வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது
பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன்
47:24)
அல்குர்ஆனை ஓதுதல்
பொருளறியாமல் படித்தாலும்
ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே
நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை
ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.
திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில்
அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற
இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன.
எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி
குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத்
தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.
குறிப்பாக ரமளான் மாதத்தில்
அதிமாக ஓதவேண்டும். ரமளான் மாதத்தில் ஒவ்வொரு
முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி
முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில்
ஒன்றாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும்
ரமளானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக்
காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம்
இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் :
புகாரி)
குர்ஆனின் சிறப்புக்கள்.
நாம் முஃமின்களுக்கு
ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே
குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால்
அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர
வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
(அல்-குர்ஆன் 17:82)
மனிதர்களே!
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக
ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்)
இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும்
(வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு
நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
(அல்-குர்ஆன் 10:57)
(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக)
விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம்
காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது)
இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது
சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக்
கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம்
பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய
நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
(அல்-குர்ஆன் 69: 43-46)
குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும்,
குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும்,
குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா,
ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும்
ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்.
குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக்
கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்)
கூறியுள்ளார்கள். உஸ்மான்(ரலி) புகாரி.
குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும்
மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை
உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள்
இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில்
அழிவுறவும் மாட்டீர்கள். என்பது நபிமொழி.
அபூஹுரைரா(ரலி) தப்ரானி.
பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின்
வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது
முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில்
தீமையானது மார்க்கத்தில் புதிதாகப்
புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும்
வழிகேடாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்
முஸ்லிம்.
குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில்
மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப்
போன்றது என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) திர்மிதி.
குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை
இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து
மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு
எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப்
ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு
எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். இப்னு மஸ்வூத்(ரலி)
திர்மிதி, தாரமி.
குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல்
இருப்பவருக்கு உவமைகளையும் நபி(ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின்
உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ
மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது.
குர்ஆனை ஓதாத முஃமின்களின் உவமை பேரித்தம்
பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய
சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின்
உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை
இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை
ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை
போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய
சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அபு மூஸா(ரலி) புகாரி, முஸ்லிம்.
குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை
ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன்
அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது
கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது
அனைத்து இடங்களிலும் மணம்
வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது
அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும்
அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை
கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல்
கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அபுஹூரைரா(ரலி) திர்மிதி,
நஸயீ, இப்னுமாஜா.
நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற
சமயத்தில் நபி(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம்
பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத
நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது
ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய
இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார்
விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள்
அனைவரும் இதை விரும்புவோம் என்று
பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல்
பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று
அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல்
அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட
சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று
ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை
ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில்
ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது
தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை
பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா?
என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை
விரும்புவோம் என்று கூறினோம். மூன்று
(குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய
தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த
மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபுஹூரைரா(ரலி) முஸ்லிம், இப்னுமாஜா).
குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர்
கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை
ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத்
திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால்
அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி)
புகாரி, முஸ்லிம்.
மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில்
நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று
கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு
நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக!
நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி
முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது
அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் பின்
அம்ர்(ரலி) அபூதாவுத், திர்மிதி.
குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார்.
அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி
என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த
கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன்
அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது
அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும்.
பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு
சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான்.
அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக
ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு
வசனத்திற்க்கும் ஒரு நன்மை
அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அபுஹூரைரா(ரலி) திர்மிதி, இப்னு
குஸைமா.
குர்ஆன் உயிருடன் இருக்கும்
போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய
இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல்
செய்வதற்கு இல்லை.
(இது)
உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை
செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு
(தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென
உறுதிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 36: 70)
குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம்
அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும்
என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும்
குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர்
உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய
வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள
முடியும் என்பது உண்மை. உங்களை மரணம்
வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத்
தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத்
தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற
பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி
செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை
முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது
வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும்
தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப்
படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.
குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட
வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே
அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம்
ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல்
குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை
அறிந்தவர்களிடம் கேட்டுத்
தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி
செயல்படுங்கள்.
|